Wednesday 16 September 2015

உணர்வுகளின் ஊர்வலம்

இன்று மழைப்பூக்கள் சிதறலாம்
நல்லவேளை குடை மறந்தேன்

பார்வைக்கு மாற்றாய் வாங்கிய வரமென
செவி நிறைக்கும் இசை ஞானம்
சாலையோர சிறுவனின் விரலசைவில்
குறையொன்றுமில்லை நமக்கு

முந்தியில் குழந்தையை ஒளித்தபடி
நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி
ஏனோ பிச்சையிட மனமில்லை
இன்னும் இந்தியா வளர வேண்டும்

அவசர போக்குவரத்தில்
நொடி நேர திகில் தரும்
ஒலிப்பானை அலற விடும்
இளைஞனைப் பிடித்து
நாகரீகம் பழக்க சினமுண்டு

முச்சந்திப் பிள்ளையாரிடம்
சிறு வேண்டுதல் இன்று
முகூர்த்த நாளாய் இருக்கட்டும்
பூக்காரப் பாட்டிக்காக

உறக்கம் தொலைத்த
கண்களில் பள்ளிச் சுமை தாங்கும்
பட்டுக் குழந்தைகளின் திறக்காத
மௌனங்கள் உடைபட்டு
கனவுகள் மெய்ப்பட வேண்டும்

அடடா!இன்று விடுமுறை
இதய சலசலப்பினால்
கவலைகளைக் காணவில்லை

இதழோரம் குவியும்
வெட்கம் கலந்த புன்சிரிப்பு
எதிரினில் உன் சாயல்

உன்னை நினைக்கும் நொடிதனில்
பற்றி எரிந்தது மஞ்சள்
பச்சையாக மாறுவதற்குள்
புறப்பட வேண்டும் நான்
இன்றைய நாளை என் வசமாக்க

இதயம் தாங்கிய நுண்ணுணர்வுகள்
ஊர்வலம் போக நாளை
திரும்பவும் சந்திப்போம்
மற்றுமொரு சாலைச் சந்திப்பினில்!!

1 comment:

  1. சிறு சிறு அனுபவங்களைத்
    தோள் சுமந்து சொற்கள்
    கவிதையாகியிருக்கின்றன..

    வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete